சென்னை, புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் காலை முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நீடிக்கும் என்றும் கனமழை செப்டம்பர் மாதத்தில் தொடரும் என்றும் வெதர்மேன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகளில் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம்தான் சிறந்த மழைப்பொழிவை பெற்றுள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இந்த ஆண்டின், தென்மேற்குப் பருவமழையின் ஆரம்பத்திலும் சுமாரான மழைப்பொழிவே காணப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டை போல நடப்பாண்டும் பருவமழை ஏமாற்றிவிடுமோ என்று அஞ்சிய நிலையில் ஆகஸ்ட் மாதம் பெய்த மழை கைகொடுத்தது.
இதனால் கடந்த ஆண்டை போல நடப்பாண்டும் பருவமழை ஏமாற்றிவிடுமோ என்று அஞ்சிய நிலையில் ஆகஸ்ட் மாதம் பெய்த மழை கைகொடுத்தது.
ஆகஸ்ட் மாத மழை
ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதலே, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது. ஆகஸ்ட் மாதத்தின் முடிவில், மாநிலம் முழுவதும் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாத மழைப்பொழிவுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 'கடந்த 50 ஆண்டுகளில், தமிழகத்துக்கு அதிக மழை கிடைத்த ஆகஸ்ட் மாதம் மற்றும் கடந்த 150 வருடங்களில் 8வது அதிக மழையைப் பெற்ற ஆகஸ்ட் மாதம் இது என்று பதிவிட்டுள்ளார்.1876லிருந்து புள்ளிவிவரம் இருக்கிறது. குறிப்பாக திருவண்ணாமலை, சிவகங்கை, பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிக மழையைப் பெற்றது என்று கூறலாம்
200 ஆண்டுகளில் மழை அளவு
கடந்த 200 ஆண்டுகளில், சென்னைக்கு 9வது மழை மிகுந்த ஆகஸ்ட் மாதமும் இதுதான். சென்னையின் அதிகபட்ச மழை பெற்ற ஆகஸ்ட் மாதம் என்ற சாதனையை, 2011ஆம் ஆண்டு முறியடித்தது. அதற்கு பிறகு 2011 ஆண்டைவிட அதிக மழைகொண்ட ஆகஸ்ட் மாதம் இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் செங்குன்றம் 425 மில்லி மீட்டர் அளவிற்கு இந்த ஆகஸ்ட் 2107 ஆண்டு பதிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு
செப்டம்பர் மாத தொடக்கமே மழையோடு தொடங்கியுள்ளது. இது நீடிக்கும். சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியும், 29ஆம் தேதியும் கனமழை பெய்தது என்றும் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவிங்க மக்களே
மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதாகவே ரேடார் படம் காண்பிக்கிறது. ஜில்லென்ற மழையையை நன்றாக மக்கள் அனுபவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை ஆரம்பத்தில் ஏமாற்றினாலும் இறுதியில் கைகொடுத்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை
இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல மேற்கு கடற்கரையோரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபரில் வடகிழக்கு பருவமழையும் கைகொடுத்தால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீரும்.




