Thursday, 12 October 2017

2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகி வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அரசு பரிசீலிக்கும்.... ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கான குழு .


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கான குழு சில தினங்களில் அமைக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கரூரில் நேற்று நடைபெற்ற 45-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கான குழு 2 அல்லது3 தினங்களில் அமைக்கப்படும். 15 நாட்களுக்குள் இக்குழுவிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகி வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அரசு பரிசீலிக்கும்.

9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகள் அனைத்தும் ரூ.400 கோடியில் கணினிமயமாக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள கல்வி முறை குறித்து அறிந்துவருவதற்காக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கல்வித் துறை சார்பில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்றார்.

Tuesday, 10 October 2017

Flash News:Tntet 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தின் போது திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது


வேலை கிடைக்காததால் விரக்தி: ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர் ‘திடீர்’ தர்ணா போராட்டம்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தின் போது திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும் கோரிக்கை மனுக் களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

இதில் கல்வி உதவித் தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்ற கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை டவுன் முத்து விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்த இன்பராஜ் என்பவர் ஏலச்சீட்டு நடத்தினார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர். இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.3½ கோடியுடன் இன்பராஜ் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதியில் இருந்து தலைமறைவாகி விட்டார்.

ஏலச்சீட்டில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர்கள். எனவே, ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவாக உள்ள இன்பராஜை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டுதர வேண்டும்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென வேட்டவலம் சாலை ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கொளஞ்சியப்பனை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

கொள்ஞ்சியப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி வாசகங்கள் எழுதிய 2 அட்டைகளை முதுகிலும், மார்பிலும் கட்டி தொங்கவிட்டு இருந்தார்.

முன்னதாக அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனக்கு 50 வயது ஆகியும் அரசு பணி என்பது கனவாகவே போகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையால் பணி கிடைக்கவில்லை. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும். இனி நியமிக்கப்படும் மத்திய, மாநில அரசு பணியாளர்களை 15 ஆண்டுகளில் பணி ஓய்வு அளித்திட வேண்டும். இதனால் வறுமை ஒழிந்து பொருளாதார ஏற்றத்தாழ்வு நீங்கும்.

Tuesday, 3 October 2017

TET - ஆசிரியர் நியமனம்-தகுதிகாண் மதிப்பெண் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்



அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குப் பயன்படுத்தப்படும் தகுதிகாண் மதிப்பெண் முறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குப் பயன்படுத்தப்படும் தகுதிகாண் மதிப்பெண் முறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 
பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் தகுதிகாண் முறையில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யக் குழு நியமிக்கப்படவுள்ளது.இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Monday, 2 October 2017

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு : டெங்கு பயத்தால் பெற்றோர்கள் புலம்பல்


: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி ஆகியவற்றுக்காக தமிழகம் முழுவதும் கடந்த 29ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடப்பட்டன. விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதே நேரத்தில் பெற்றோர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பிரச்னை பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க பள்ளிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியாகியுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 21 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். 

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இதுவரை 250 பேர், குறிப்பாக குழந்தைகள் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் தஞ்சாவூரில்தான் அதிகமானோர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் டெங்கு உற்பத்தி லார்வாக்கள் பெருமளவில் குறைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிக்குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என பொது சுகாதார துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து பள்ளிகளிலும் கழிவுநீர் அகற்றுவது போன்ற பணிகளை முடக்கிவிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் கொசு எதிர்ப்பு வாரமாக அறிவிக்கப்பட்டு அனைத்து வீடுகளிலும் உள்ள பெண்களிடம் கொசு ஒழிப்பு தொடர்பான பிரசாரங்கள் நடத்தப்படவுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கொசு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் சுகாராதப் பணியாளர்கள் இணைந்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை ஏற்கனவே தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு நல்ல பலனை அளித்துள்ளது.

டெங்கு கொசுக்கள் பிரச்னையுடன், இப்போது புதிதாக போலி மருத்துவர்கள் பிரச்னையும் எழுந்துள்ளது. தவறான மருந்துகளை இவர்கள் கொடுப்பதாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் 100 போலி மருத்துவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனவே, காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனைகளுக்கோ அல்லது சரியான மருத்துவமனைகளுக்கோ உடனடியாக சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மாணவனின் ’தூய்மை’ குறும்படம்; தேசிய அளவில் இரண்டாமிடம்

’துாய்மை பாரதம்’ திட்டத்தில், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல், குப்பையை தரம் பிரித்து சேகரித்தல், கழிப்பறை கட்டிக் கொடுத்தல், பொது இடங்களை சுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
வரும், 2019, அக்., 2ல் ’துாய்மையான இந்தியா’ என, நம் நாட்டை பிரகடனப்படுத்த, பிரதமர் மோடி திட்டமிட்டு இருக்கிறார்.இதற்காக, அனைத்து அரசு துறைகள் மூலமாகவும், துாய்மையை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவ - மாணவியருக்கு குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியர் இடையே குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. தமிழக அளவில், 40 பல்கலைகளில் இருந்து, 70க்கும் மேற்பட்ட குறும்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., - பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் விஷ்ணு தயாரித்த குறும்படம், தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றது.
இதை கவுரவிக்கும் வகையில், டில்லி விஞ்ஞான் பவனில் நாளை மறுதினம் (அக்., 2) நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, தனது கரங்களால் மாணவருக்கு விருது வழங்குகிறார்.
மாணவன் விஷ்ணு தயாரித்த குறும்படத்தில், வீதியில் குப்பை பரவிக் கிடக்கிறது; தொட்டி சிறிது துாரத்தில் உருண்டு கிடக்கிறது. அவ்வழியை பலரும் கடந்து செல்கின்றனர். யாரும் குப்பையை பொருட்படுத்த வில்லை.
அவ்வழியாக வரும் இளைஞன், தனது பேண்ட்-ஐ மடித்து, தனி ஒருவனாக நின்று, தொட்டியை நிமர்த்தி வைத்து, குப்பையை பெருக்கி, அதில் போடுகிறார். அப்பகுதியை சிறிது நேரத்தில் சுத்தப்படுத்தி, சினிமா போஸ்டர் வாங்கி, அதன் பின்புறத்தில், ’குப்பையை தொட்டியில் போடவும்’ என, எழுதி ஒட்டுகிறார்.
இப்படி இளைஞர்களால் இந்தியாவை மாற்றிக் காட்ட முடியும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார், விஷ்ணு. இதற்காகவே இவருக்குகிடைத்துள்ளது இந்த அங்கீகாரம்

விருதுக்கு தகுதியான மாணவர் யார்? பட்டியல் அனுப்ப உத்தரவு


பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்வி மட்டுமல்லாமல், கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட இணை செயல்பாடுகளில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், காமராஜர் விருது வழங்க, சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இவ்விருது வழங்கப்படும். ஆண்டு இறுதித்தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் கொண்டவர்கள், தகுதியானவர்களாவர்.
இவர்கள், கலை இலக்கிய போட்டிகள், விளையாட்டு, மன்ற நிகழ்வுகளில் பங்கேற்று, மாவட்ட, மாநில, தேசிய அளவில், பரிசு பெற்றவர்களாக இருத்தல் அவசியம். இதர செயல்பாடுகள் பிரிவுக்கு, 40 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள் கொண்டு, மதிப்பெண்கள் பிரித்தளிக்கப்படுகின்றன.
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்தும், அதிகபட்சம் மூன்று மாணவர்கள் வரை பரிந்துரைக்கலாம். மாவட்ட தேர்வுக்குழுவானது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில், தலா 20 மாணவர்களின் பெயர்களை, இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கும். மாநில தேர்வுக்குழு, மதிப்பெண்கள் அடிப்படையில், மாவட்டத்திற்கு தலா 30 மாணவர்களுக்கு இவ்விருது வழங்குகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி கூறுகையில், ”பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தல் படி, மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்படும். இதற்கு, தகுதியானோர் பட்டியல் அனுப்புமாறு, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கு, தலா 10 ஆயிரமும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, தலா 20 ஆயிரமும், பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கல்வி அல்லாமல், இணை செயல்பாடுகளில் பங்கேற்கும் ஆர்வம், மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும்,” என்றார்

காலாண்டு தேர்வு முடிவுகள் வரும் 4ல் சமர்பிக்க உத்தரவு


காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், நாளை (அக். 3 ம் தேதி), பள்ளிகள் திறக்கின்றன. விடுமுறை நாளில், மதிப்பீட்டு பணிகள் முடித்து, அந்தந்த பாடவேளையில், விடைத்தாள் விநியோகிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில்,’பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிவை, மாவட்ட கல்வி அலுவலகத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 முடிவுகளை, முதன்மை கல்வி அலுவலகத்திலும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
’தோல்வியை தழுவிய மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். வாரத்தேர்வுகள் நடத்தி, அரையாண்டு தேர்வுக்குள், கற்றல் திறன் மேம்படுத்த வழிவகை செய்யப்படும்’ என்றனர்.

ஆசிரியர்களாக மாறச்சொல்வதால் அதிகாரிகள் ’ஷாக்’

: அரசு அலுவலகங்களில் அமர்ந்து, நிர்வாக விஷயங்களை கவனித்து வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பட்டப்படிப்பு கல்வித்துறை, ’ஷாக்’ கொடுத்துள்ளது.
அலுவலக பணிகளுடன், வாரத்துக்கு ஆறு மணி நேரம், அருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று பாடம் நடத்துவதை கட்டாயமாக்கி, அந்த துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் அமர்ந்து, ராஜாங்கம் நடத்தி பழக்கப்பட்டவர்கள். 10 - 15 ஆண்டுகள், ஆசிரியர்களாக பணியாற்றிய பின், அந்த தொழிலுக்கு முழுக்கு போட்டு, அரசு பணிக்கு வந்த பல அதிகாரிகள், கற்பிக்கும் திறனை இழந்துள்ளனர்.
தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பட்டப்படிப்பு கல்லுாரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதற்கு தீர்வு காண்பதுடன், அதிகாரிகளின் திறனை மேம்படுத்தும் எண்ணத்தில், பட்டப்படிப்பு கல்வித்துறை, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இதன் படி, பட்டப்படிப்பு கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஆசிரியர்களாகவும் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அலுவலக பணிகளுடன், வாரத்துக்கு ஆறு மணி நேரம், அருகிலுள்ள அரசு அல்லது அரசு நிதியுதவி பெறும், பட்டப்படிப்பு கல்லுாரிக்கு சென்று, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.எந்த பாடத்தை கற்றுக் கொடுப்பது என்பதை, தாங்களே முடிவு செய்து கொள்ள, அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அலட்சியம் செய்யக்கூடாது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு பாடம் நடத்த செல்வதாக கூறி, நேரத்தை வீணடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தி, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பட்டப்படிப்பு கல்வித்துறையின், உத்தரவு அதிகாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிவமொகா, தார்வாட், கலபுரகியின் இணை இயக்குனர்கள், தங்கள் பகுதியில் பணியாற்றும் சிறப்பு அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள், நோடல் அதிகாரிகளை, கல்லுாரி பேராசியர்களாக நியமிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.அதிகாரிகளில் பலருக்கு, கற்பிக்கும் திறன் இருக்காது.
இப்படிப்பட்டவர்களை, மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுப்பினால், அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதே வேளையில், மாணவர்களுக்கு பாடம் நடத்த, சில அதிகாரிகள், ஆர்வமாக முன் வந்துள்ளனர்

பள்ளிகளின் வாரலாற்றுத் தகவல்கள்

பள்ளிக் கல்வித்துறை சார்பில், மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. இதில், மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகளின் வரலாறு, விழாக்கள் சார்ந்த குறிப்புகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதோடு, சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு, பிரத்யேக இணையப்பக்கம் அமைக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில், தகவல்களை உள்ளீடு செய்யும் பணிகள் நடக்கின்றன.
இதற்காக, மாவட்ட வாரியாக, காலஅவகாசம் அளித்து, தகவல்களை திரட்டி, புகைப்படங்களும், உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றன. அதிக பள்ளிகள் கொண்ட, மாவட்டங்களின் பட்டியலில் கோவைக்கு முக்கிய பங்குண்டு.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை, முன்னாள் முதல்வர்கள் பார்வையிட்ட பள்ளிகள், அறிஞர்கள், கல்வியாளர்களின் வருகை சார்ந்த குறிப்புகள், அரிய புகைப்படங்கள், குறிப்பேடுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுப்பாக்கி, இணையதளத்தில் பதிவேற்றும் வகையில், தயார் நிலையில் வைக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ’கோவை மாவட்டத்தில், வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிகள், தொன்மையானவை என இரண்டாக பிரித்து, கிட்டத்தட்ட 12 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவை தவிர, அனைத்து பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள், மாறுபட்ட கற்பித்தல் முறைகள், இணை செயல்பாடுகளை தகவல் தொகுப்பாக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
’பள்ளிக்கல்வித்துறையின், தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கேட்கும் போது, தகவல்கள் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படும்’ என்றனர்

பெண்களுக்கு பயிற்சி பள்ளி

: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், பெண்களுக்கான முதல் ஓட்டுனர் பயிற்சி பள்ளியை, மகளிர் பல்கலை தொடங்கவுள்ளது.
சவுதியில், பெண்கள், கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டு மன்னர், சல்மான், கடந்த வாரம் உத்தரவிட்டார். பெண்களுக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதையடுத்து, பல லட்சம் பெண்கள், கார் ஓட்டும் பயிற்சி எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய பயிற்சியாளர் நியமனம்


ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், உள்ளடக்கிய கல்வித்திட்டம், சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிக அடிப்படையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் அடிப்படையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் இயன்முறை பயிற்சியாளர்கள், தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப்பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இயன்முறை பயிற்சியாளருக்கு குறைந்தபட்சம் இளங்கலை பிசியோதெரபி படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தொழில்சார் பயிற்சியாளர் பதவிக்கு இளங்கலை தொழில் சார் பயிற்சி படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பேச்சு பயிற்சியாளர் பணிக்கு இளங்கலை கேட்பு மற்றும் பேச்சுத்திறன் பயிற்சி அல்லது பி.எஸ்.சி., ஸ்பீச் பெத்தாலஜி படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி, அனுபவ சான்று நகல்களுடன் விண்ணப்பங்களை அக்.,6க்குள் ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி
முதன்மைக்கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஓம்சக்தி நகர், மாடியில், பட்டணம்காத்தான் வி.ஏ.ஓ., அலுவலகம் பின்புறம், ஓம்சக்திநகர், ராமநாதபுரம்.

தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு'


தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கற்றலில் குறைபாட்டால் (டிஸ்லெக்ஸியா) பாதிக்கப்பட்டிருக்கலாம் யிற்சியாளர் ஹரிணி மோகன் கூறினார்.
மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கம் மற்றும் சென்னை தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து கற்றலில் குறைபாடு வார விழாவை திங்கள்கிழமை தொடங்கின. அக். 7-ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்வுகளில் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான ஓவியம், நெருப்பில்லாத சமையல், கோலம், கழிவுப் பொருள்களில் இருந்து கலை, நாடகம், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வுகள் சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தைச் சேர்ந்த கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன் கூறியது: தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் 2 கோடி மாணவர்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு கற்றலில் குறைபாடு காணப்படும் வாய்ப்புள்ளது. அதாவது 40 பள்ளி மாணவர்கள் உள்ள வகுப்பில் 4 அல்லது 5 பேருக்கு இந்தக் குறைபாடு காணப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாவதற்கு கற்றலில் குறைபாடும் முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.
மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறியது: கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகமாகக் காணப்படும். ஆனால் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற விஷயங்களில் சிரமப்பட்டாலும், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் படிப்பில் மதிப்பெண் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக பிற துறைகளில் அவர்களுக்கு உள்ள திறமை ஊக்குவிக்கப்படுவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் அந்தக் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும்

TET வெயிட்டேஜ் முறை குறித்து ஆய்வு நடத்தப்படும் - செங்கோட்டையன்


  • TET வெயிட்டேஜ் முறை குறித்து ஆய்வு நடத்தப்படும் - செங்கோட்டையன் 
  • VIDEO CLICK HERE

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...